காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.
தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.
நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.
ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.
பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.
கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.
பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.
இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.
புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.
காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.