பிரிவுகள் தற்காலிகமானவை. என்றுதான் ஒரு காலம் வரை எண்ணியிருந்தேன். ஆனால் அவை நிரந்தரமானவைதான் என்று இழந்துவிட்ட சொந்தங்களை,உறவுகளை நட்புகளை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
எங்களுக்கே எங்களுக்காக நாமே தேடிக்கொள்ளும் ஒரு சொந்தம் ‘நட்பு” மட்டும் தான். அதனால் தானோ என்னவோ உயிர்வரை வேரோடிப்போய் ஒரு அதிர்வை நமக்குள் உண்டு பண்ணுகின்றது. பாலர் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை சேர்ந்திருந்து படித்தவர்களில் நட்பு என்ற வட்டத்துக்குள் வந்து சிக்கிக்கொள்வது மிக மிகச்சிலரே. அந்தக்குழந்தை வயது நட்பு எங்களின் நரை வரை நரைக்காமல் நுரைத்து நிற்கும்.
காலமும் சூழலும் நம்மை எங்கெங்கோ தூக்கிப்போட்டு விட்டிருக்கிறது. இதயம் துடிக்கும் போதெல்லாம் ‘நமக்கான நட்பின் ஏக்கம் நம்மை வாட்டி எடுக்கும் என்பது உண்மைதான். எத்தனையோ ஒளிந்திருக்கும் விடயங்களை ஒளிவு மறைவின்றிச்சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விடுவோமே! இப்போது வெறும் உஷ்ண மூச்சாய் அவை வெளியேறிக்கொண்டிருக்கின்றன.
எனது பாடசாலை நட்பின் அடர்த்தியை உங்கள் வரிகளிலும் கண்டேன். மனசுக்குள் ஏதோ ஒரு தவிப்பு. சிவசோதி!...உங்கள் வாழ்க்கையில் வெளிச்சமாய் இருந்திருக்கிறார்.
நிச்சயம் நீங்கள் மறுபடி சந்திப்பீர்கள். உங்கள் எண்ணம் ஈடேற ஆண்டவனை வேண்டுகின்றேன்.
(விஜி)
கற்றையாய் நகரும் மேகங்களைக் கடந்து
சிகரங்களின் உச்சியில் ஒற்றையாய் ஏறி
நின்று தேடுகிறேன், உயிர் வரை பரவிய
உன் நினைவின் சுவடுகளை………………….
நிலவின் நிழலில் ஒளிந்து கிடக்கும்
ஒற்றைத் தாமரைக்குள் நீ ஓடி ஒளிந்ததை
அருகில் பறந்த வெள்ளைப் பறவை
மெல்லக் குனிந்து என் காதில் சொன்னது.
உயர்ந்த மரமொன்று கிளை நீட்டி
உதவ நான் கீழறங்கி நடக்கையில்,
ஓவியங்களில் படிந்திருக்கும் வண்ணத்
தீற்றலாய் எண்ணங்களில் நிறைகிறாய் நீ…….
விண்ணைக் கிழித்து வெளிவந்த சின்ன மின்னலின்
விளக்கொளியில் உன் கள்ளச்சிரிப்பை நான் கண்டறிய,
மெல்லப் புரிகிறது……"என் உலகம் நீயென்ற உண்மை".
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!
காதல் தானடி
என்மீதுனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்
இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?
என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே
உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?
இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?
என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது
பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்
இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்
என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி
நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்
நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்
ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்
உணர்ச்சி பழையது
உற்றது புதியது
இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை
தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை
என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்
உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்
தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்
புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்
நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது
உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது
இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்
சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.