ஜன்னலுக்கு வெளியே மழையின் ஈரம்
ஒரு மவுனத்தை போல உறைந்து கிடக்கிறது
காலம் வழிந்து கொண்டு இருக்கிறது - இலைகளின் வழியாக
துளிர்த்தும் உதிர்ந்தும்..மழையின் மிச்சங்களாக
சொற்களின் பிம்பங்களை காட்டிய குமிழ்கள் உடைந்து
வெற்றிடங்கள் எங்கும் நிரம்புகின்றன - உறைந்த மவுனத்தில்
இருளும் வெளிச்சமும் கொண்ட அந்தரங்க நடைபாதையின்
சில வளைவுகளில் மிச்சமிருக்கிறது
சில பூக்களும் கொஞ்சம் மழைத்துளிகளும்
எதுவும் இறுதியில்லை எனினும் முத்தமிட தோன்றுகிறது
உன் வெம்மையில் தொலைந்து விட தோன்றுகிறது - எனினும்
மற்றுமொரு முறை கைகளை கோர்த்து மெல்ல பிரிகிறோம்.
மழை மீண்டும் வலுக்கும் என்ற நிலையோடு வானம்
விரிந்து கிடக்கிறது பல நிறங்களில்...
பறவைகள் மட்டுமே பயணிக்கின்றன வானம் முழுவதும்..
0 comments:
Post a Comment